ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா தகுதியான நாடு - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

ஐ நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா வலுவான போட்டியாளராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Image Credit:Twitter@ S Jaishankar
Image Credit:Twitter@ S Jaishankar
Published on

ரியாத்,

சவுதி அரேபியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா வலுவான போட்டியாளராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், "சர்வதேச பாதுகாப்பைப் பேணுதல், உலகச் சூழலுக்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை எடுப்பது போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதில் இந்தியா எப்போதும் முன்னணியில் உள்ளது. மிகப்பெரிய ஜனநாயகம், ஐந்தாவது பெரிய பொருளாதாரம், அணுசக்தி, தொழில்நுட்ப மையம் மற்றும் உலகளாவிய ஈடுபாட்டின் பாரம்பரியம் என பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

சர்வதேச பாதுகாப்பைப் பேணுவதற்கான அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், தொடர்புடையதாக இருக்கவும், வளர்ந்து வரும் உலகளாவிய நிலைமைகளுக்கு கவுன்சில் மாற்றியமைக்க வேண்டும்.ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இன்றைய உலகின் யதார்த்தத்தை அது பிரதிபலிக்க வேண்டும். அது விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதில் பொதுவாக உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்து உள்ளது. இது இந்தியாவுக்கு மட்டும் சாதகமானது அல்ல; பிரதிநிதித்துவம் இல்லாத பல பகுதிகளுக்கும் சாதகமானது.

உலக நாடுகளோடு தொடர்ந்து இணைந்து பணியாற்றும் நாடாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாவதற்கான அனைத்துத் தகுதிகளையும் இந்தியா கொண்டிருக்கிறது" என்று அவர் அளித்த பேட்டியில் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com