

ஜோத்பூர்,
இந்திய விண்வெளியில் இரு நாட்டு போர் விமானங்களும் சீறிப்பாய்ந்து சாகசம் நிகழ்த்தும் வகையில், இந்தியா மற்றும் ஜப்பான் விமானப்படைகளின் பிரம்மாண்ட 'வீர் கார்டியன் - 2026' கூட்டுப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இன்று தொடங்கியது.
இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில், ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இந்த பிரம்மாண்ட பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு இந்த பயிற்சி நீடிக்கிறது.
இதில் இந்தியாவின் அதிநவீன மற்றும் உலகின் முன்னணி போர் விமானங்களான தேஜஸ், சுகோய்-30 எம்கேஐ மற்றும் ரபேல் ஆகிய போர் விமானங்கள் பங்கேற்று வானில் சீறிப்பாய்கின்றன. அவற்றுக்கு இணையாக ஜப்பான் விமானப்படையின் அதிபயங்கர எப்-2 போர் விமானங்களும் இந்த பயிற்சியில் களம் இறங்கியுள்ளன.
14 நாட்கள் இடைவிடாது நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சியில், இரு நாட்டு விமானப் படை வீரர்களும் தங்களின் அசாத்திய போர் திறமைகளை பரஸ்பரம் வெளிப்படுத்த உள்ளனர். நவீன போர் பயிற்சி முறைகள், வான்வழி தாக்குதல் உத்திகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக விவாதித்து அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டுப்பயிற்சியின் மூலம் இந்திய - ஜப்பான் விமானப் படைகளின் பலம் பன்மடங்கு உயர்வதோடு, இருநாடுகளின் நீண்டகால ராணுவ நட்புறவு மேலும் இமயமாய் வலுப்பெறும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.