

புதுடெல்லி,
சர்வதேச பெரிய புள்ளி சிறுத்தை தினத்தை முன்னிட்டு, ஆசியாவின் மிகவும் அரிதான காட்டு பூனை இனங்களில் ஒன்றான பெரிய புள்ளி சிறுத்தையை பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்காகப் புதிதாக 'பெரிய புள்ளி சிறுத்தை பாதுகாப்பு செயல்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசு, சர்வதேச சுற்றுச்சூழல் நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் இந்த பிரத்யேக பாதுகாப்பு செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனவிலங்கு வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் 91-வது கூட்டம் நடைபெற்றது. கடந்த ஜூலை இரண்டாவது வாரத்தில் நடைபெற்ற இந்த முக்கிய கூட்டத்தின்போது, இந்த புதிய வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
அழிவின் விளிம்பில் உள்ள இந்த அரிய வகை சிறுத்தைகளின் இயற்கை வாழிடங்களை மேம்படுத்துதல்.
காடுகளில் இந்த பூனை இனங்கள் வேட்டையாடப்படுவதையும், அவற்றின் தோல் உள்ளிட்ட உறுப்புகள் கடத்தப்படுவதையும் தடுக்க கடுமையான கண்காணிப்பு.
உள்ளூர் மக்களை ஒருங்கிணைத்து வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். இந்தியாவின் வடகிழக்கு மாநில காடுகளில் அதிகம் காணப்படும் இந்த 'பெரிய புள்ளி சிறுத்தைகளை' அழியாமல் காக்க, இந்த புதிய செயல்திட்டம் பெரும் மைல்கல்லாக இருக்கும்.