

டெல்லி,
இந்தியாவின் கடல் எல்லைகளை பாதுகாக்க கடற்படை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பாதுகாப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளுக்காக டிரோன்களையும் கடற்படை பயன்படுத்தி வருகிறது. இதில் சில டிரோன்கள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் எம்கியூ-9பி கடல் பாதுகாவலன் என்ற 2 டிரோன்களை குத்தகைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவின் ஜெனரல் அடோமிக்ஸ் ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்து வரும் இந்த வகை அதிநவீன டிரோன்கள் கடல்சார் பாதுகாப்பு, கண்காணிப்பு, உளவு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றுக்கூடியவையாகும்.
இதையடுத்து, இந்த வகை டிரோன்கள் 2-ஐ குத்தகைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 30 மாதங்கள் இந்த டிரோன்களை மத்திய அரசு குத்தகைக்கு எடுத்துள்ளது. 2 டிரோன்களையும் 30 மாதங்களுக்கு பயன்படுத்த குத்தகை மதிப்பு ரூ. 1,934 கோடி ஆகும். ஏற்கனவே இதே ரக 2 டிரோன்களை கடற்படை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.