

புதுடெல்லி
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று கலந்து கொண்டார். அவர் நிருபர்கள் சந்திப்பில் பேசும்போது, பிரதமர் மோடி தலைமையின் கீழ் பல சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
அதன் பயனாக, உலக அரிசி உற்பத்தியில் நம்பர் ஒன் இடத்தில் இந்தியா உள்ளது. கோதுமை இருப்பும் முழு அளவில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியானது 34 சதவீதம் அதிகரித்து உள்ளது.
எனினும், இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டி உள்ளன. அதனால், பல்வேறு சீர்திருத்தங்களை பற்றி நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்றார். அந்த சீர்திருத்தங்கள் பற்றி விரைவாக ஆலோசிக்கும் பணியை தொடர்வோம். உணவு கையிருப்பையும், தரம் வாய்ந்த பொருட்களின் உற்பத்தியை உறுதி செய்வோம்.
விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்க செய்யப்படும் என்றார். இந்தியாவை, நம் நாட்டிற்கு மட்டுமின்றி உலகின் உணவு கூடையாக மாற்றுவோம். அதனை நாங்கள் உறுதி செய்வோம் என்றார். விவசாயிகளுக்கான திட்டங்களின் பலன்கள் அவர்களை சென்றடைய முடியாமல், அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதனை குறைக்கும் வகையில், நடைமுறைகளை எளிமைப்படுத்துவோம் என்றும் பேசினார்.