உலகின் 70 சதவீத கொரோனா தடுப்பு மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது: உள்துறை மந்திரி அமித்ஷா

உலகின் 70 சதவீத கொரோனா தடுப்பு மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது என்றும், இந்தியாவில் இருந்து 14 நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து அனுப்பிவைக்கப்படுவதாகவும் மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
உள்துறை மந்திரி அமித்ஷா
உள்துறை மந்திரி அமித்ஷா
Published on

திறமையாக கையாண்டது

மராட்டிய மாநிலம் கன்காவ்லியில் நடந்த தனியார் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசியதாவது:-

பிரதமர் மோடியின் கீழ் இந்திய அரசு கொரோனா தொற்றை திறமையாக கையாண்டது. நலிந்த சுகாதார கட்டமைப்பை வைத்து கொண்டு மிகப்பெரிய மக்கள் தொகை உள்ள ஒரு நாட்டில் கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டதை ஒவ்வொருவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

தொற்றை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் திறமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஊரடங்கு, மக்களின் ஊரடங்கு போன்றவை ஊக்கமாக அமைந்தது.

70 சதவீத கொரோனா தடுப்பு மருந்து

கடந்த 21 நாட்களில் நாட்டில் 55 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. உலகின் 70 சதவீத கொரோனா தடுப்பு மருந்து தேவையை பூர்த்தி செய்ய இந்தியா தயாராகி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பு மருந்துகள் 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் 4 தடுப்பு மருந்துகள் விரைவில் தயாராக உள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள், டாக்டர்கள், சுகாதாரப்பணியாளர் மற்றும் 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்கொண்டனர். நமது நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

மாநில அரசு மீது குற்றச்சாட்டு

மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவியில் பங்கு தருவதாக எந்த உத்தரவாதத்தையும் நாங்கள் வழங்கவில்லை. நான் பூட்டிய அறையில் எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. நான் என்ன செய்தாலும் வெளிப்படையாக செய்வேன். பூட்டிய அறையில் நான் அரசியல் செய்வதில்லை. நாங்கள் பச்சை பொய்களை பேசுவதில்லை. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மதிப்பு கொடுப்பவர்கள்.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றால் நிதிஷ்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என உறுதி அளித்தோம். பீகார் தேர்தலில் பா.ஜனதா நிதிஷ்குமாரின் கட்சியை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் அவருக்கு முதல்-மந்திரி பதவி கொடுக்கப்பட்டது.

ஆற்றில் போடப்பட்டது

ஆட்சி அதிகாரத்தின் மீது இருந்த இச்சை காரணமாக பால் தாக்கரேவின் எல்லா கொள்கைகளும் தபதி ஆற்றில் போடப்பட்டது. பா.ஜனதா கொள்கைக்காக அரசியல் செய்கிறது. சிவசேனா போல அரசியல் செய்வதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com