

புதுடெல்லி,
இந்தியா நேற்று நவீன சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து சாதனை படைத்தது. ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இது கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் (டி.ஆர்.டி.ஓ.), கடல் எல்லையில் குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நேற்று சோதனை செய்து பார்க்கப்பட்டது.
சோதனையின்போது குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இலக்கை துல்லியமாக தாக்கி, சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக டி.ஆர்.டி.ஓ. டுவிட்டர் பதிவு வெளியிட்டு உள்ளது.
ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்திய கடற்படையின் மிஷன் தயார்நிலையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறினார். இதற்காக உழைத்த விஞ்ஞானிகள் குழுவுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
இந்தியா-ரஷியா கூட்டு முயற்சியுடன் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல், விமானங்கள் மற்றும் தரையில் இருந்து ஏவும் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன என்பது நினைவூட்டத்தக்கது. பிரமோஸ் ஏவுகணைகள் 2.8 மாக் (அதாவது 3450 கி.மீ.) வேகத்தில் செல்லக்கூடியது. அதாவது ஒலியின் வேகத்தைவிட 3 மடங்கு வேகமாக பாய்ந்து செல்லும் திறனுடையது.