கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கப் போகிறது பிரதமர் மோடி பெருமிதம்

கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கப் போகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
Image courtesy : Twitter/BJP
Image courtesy : Twitter/BJP
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் விரைவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

இந்தநிலையில், இன்று தேசிய அறிவியலாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம், இந்தியாவில் தொடங்கப் போகிறது. இதற்காக பணியாற்றிய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களால் நாடு பெருமைப்படுகிறது.

ஆராய்ச்சி முக்கியம்

ஒரு நாடு எந்த அளவுக்கு விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்துகிறதோ, அந்த அளவுக்கு வலிமை அடையும் என்பதுதான் கடந்த காலம் நமக்கு கற்றுத்தந்த பாடம். அந்த தொழில்நுட்பம், புதிய தொழிற்சாலைகள் உருவாகவும், ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது.

எந்த முற்போக்கான சமுதாயத்திலும் ஆராய்ச்சி என்பது முக்கியமானது, உறுதியானது. அது, அணுகுமுறையையும், சிந்தனையையும் பரவலாக்குகிறது.

இந்திய பொருட்கள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு உலகளாவிய தேவையை உறுதி செய்வதுடன், அவை உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அளவைப்போல் தரமும் முக்கியம். தற்சார்பு இந்தியாவுக்கான நமது தேடலுக்கு ஏற்ப நமது தரமும் உயர வேண்டும்.

நாம் இந்திய பொருட்களைக் கொண்டு உலகத்தை நிரப்ப விரும்பவில்லை. ஆனால், உலகின் மூலைமுடுக்குகளில் இந்திய பொருட்களின் ஒவ்வொரு வாடிக்கையாளருடைய மனதை வெல்ல வேண்டும். சேவைகளின் தரம்தான், உலக அளவில் இந்தியாவின் வலிமையை தீர்மானிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com