

லடாக்,
லடாக்கின் ஆபத்தான நன்-குன் மலைத்தொடரில், சுமார் 18,600 அடி உயரத்தில் மரண போராட்டம் நடத்தி கொண்டிருந்த நபரை, இந்திய ராணுவத்தின் வீரர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து மீட்டுள்ளனர். பனிப்புயல் மற்றும் அடர் பனி படர்ந்த செங்குத்தான மலைமுகட்டில், ஹெலிகாப்டரை சாமர்த்தியமாக இயக்கி நடத்தப்பட்ட இந்த திகைப்பூட்டும் மீட்பு நடவடிக்கை நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.
மிக கடுமையான காற்று வீசியதாலும், ஹெலிகாப்டரை முழுமையாக தரையிறக்க போதிய இடமில்லாததாலும், பைலட்டுகள் ஹெலிகாப்டரின் ஒரே ஒரு சறுக்கு கட்டையை மட்டும் பனியின் மீது தொட்டவாறு அந்தரத்தில் நிலைநிறுத்தி, ஒரே ஒரு கயிற்றை பயன்படுத்தி அந்நபரை காப்பாற்றினர்.
மிக அதிக உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும் என்பதால், விபரீதத்தை தவிர்க்க ஹெலிகாப்டரின் எடையை குறைக்க தேவையற்ற உபகரணங்கள் யாவும் நீக்கப்பட்டு, மிக குறைந்த அளவிலான எரிபொருளுடன் இந்த ஆபத்தான ஆபரேஷன் நடத்தப்பட்டது.
அன்றைய நாளின் சூரிய வெளிச்சம் முழுமையாக மறைவதற்கு முந்தைய, கடைசி சில நிமிடங்களுக்குள் இந்த மீட்பு பணி மிக துல்லியமாக திட்டமிடப்பட்டபடி, வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.இந்திய ராணுவத்தின் பயர் அண்ட் பியூரி கார்ப்ஸ் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள இந்த அசாத்தியமான மீட்பு பணி காணொலி, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
நாட்டின் எல்லையை காப்பதோடு மட்டுமல்லாமல், இக்கட்டான சூழலில் மக்களின் உயிரை காக்க இந்திய ராணுவத்தினர் காட்டும் இந்த வீர தீர சாகசத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.