உரிமைகள் கைவிடப்பட்டதால் இலங்கைப்படையினரால் இந்திய மீனவர்கள் கைது; ஜெய்சங்கர்

அவசர நிலை காலத்தின்போது நாடாளுமன்றத்தில் விவாதமின்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்று ஜெய்சங்கர் கூறினார்
உரிமைகள் கைவிடப்பட்டதால் இலங்கைப்படையினரால் இந்திய மீனவர்கள் கைது; ஜெய்சங்கர்
Published on

டெல்லி,

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்தினார். இந்தியாவின் இருண்ட காலமாக பார்க்கப்படும் அவசர நிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது. எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிக்கைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அவசர நிலையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். 2 ஆண்டுகளாக நீடித்த அவசர நிலை இந்திரா காந்தியின் ஆட்சி முடிவுக்கு வந்து பாஜக ஆட்சியமைத்த உடன் 1977 மார்ச் 21ம் தேதி திரும்பப்பெறப்பட்டது. இந்தியாவில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டு கடந்த 25ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்தது தொடர்பாக பா.ஜ.க. இளைஞரணி சார்பில் தலைநகர் டெல்லியில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது,

அவசர நிலை காலத்தின்போது நாடாளுமன்றத்தில் விவாதமின்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நமது மீனவர்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுவது தொடர்பான செய்திகளை நாம் கேட்டிருப்போம். கடலில் இலங்கை எல்லைக்குள் சில பகுதிகளுக்கு இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என ஒப்பந்தம் இருந்தது. ஆனால், அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது அந்த ஒப்பந்த உரிமைகள் கைவிடப்பட்டன. இதனால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது. ஒப்பந்த உரிமைகள் கைவிடப்பட்டதற்கான விளைவுகள் தமிழ்நாட்டில் இன்னும் பாதிப்பை ஏற்படுத்துகிறது' என்றார்.    

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com