

புதுடெல்லி
இந்திய வெளியுறவு துறை செயலாளராக பதவி வகித்து வரும் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்திய வெளியுறவு துறை செயலாளராக பதவி வகித்து வருபவர் விக்ரம் மிஸ்ரி. இவருடைய பதவிக்காலம் ஜூலை மாதம் 14-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அவர், 2024-ம் ஆண்டு இந்த பதவிக்கு வந்த நிலையில், அதனை ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்து அறிவித்துள்ளது. இதனை மத்திய அதிகாரிகள், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
இதன்படி, ஜூலை 14-ந்தேதிக்கு பின்னர் ஓராண்டுக்கு வெளியுறவு துறை செயலாளராக மிஸ்ரி பதவி வகிப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு அளித்துள்ளது. அதன் அடிப்படையில், அரசின் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்திய வெளியுறவு பணியில் 1989-ம் ஆண்டு சேர்ந்த மிஸ்ரி, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் பல்வேறு பதவிகளை வகித்தவர். டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வடக்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களிலும் அவர் பணியாற்றி உள்ளார்.