

புதுடெல்லி,
ஆசியாவின் மிக பெரிய துறையாக இந்திய ரெயில்வே செயல்பட்டு வருகிறது. லட்சக்கணக்கானோர் வேலை செய்ய கூடிய இந்த துறை சரக்கு சேவையில் புதிய சாதனையை படைத்து உள்ளது.
இதுபற்றி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று கூறும்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில், தளவாட பிரிவில் இந்திய ரெயில்வே துறை சாதனை படைத்துள்ளது என்றார். இந்த சாதனையை சுட்டி காட்டி பேசிய அவர், உலகின் 2-வது மிக பெரிய சரக்கு சேவை துறையாக இந்திய ரெயில்வே உருவாகி உள்ளது என பெருமிதத்துடன் கூறினார்.
இதேபோன்று ரெயில் பயணம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதியையும் நவீனப்படுத்த வாரந்தோறும் நடவடிக்கைகள் தொடங்கி மேற்கொள்ளப்படும் என்றார். பயணத்தின்போது, தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். பயணிகளின் பயண அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுதவிர, நாடு முழுவதும் சரக்கு சேவை துறையை ஊக்குவிக்கவும் அரசு முனைப்புடன் உள்ளது. இதேபோன்று துப்புரவு மற்றும் சுகாதார தர நிலைகளிலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கவனம் செலுத்தப்படும். 3 ஆண்டுகளில், அனைத்து ரெயில்களிலும் தூய்மைக்கான சீர்திருத்தம் முழு அளவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது என உறுதிப்படுத்தப்படும் என அதற்கான காலக்கெடுவையும் மத்திய மந்திரி குறிப்பிட்டு உள்ளார்.