

மும்பை,
மராட்டியத்தின் வடகிழக்கு மும்பை பகுதியின் முலுண்ட் நகரில் மெட்ரோ ரெயில் கட்டுமானத்திற்கான பணி நடந்து வருகிறது. முலுண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு அருகே அமைந்த இந்த பகுதியில், தூண் ஒன்று திடீரென இன்று மதியம் இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பலியானார்.
அவர் ராம்தன் யாதவ் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். தவிர, 3 பேர் காயமடைந்தனர். அவர்களில் ராஜ்குமார் இந்திரஜீத் யாதவ் (வயது 45) கவலைக்குரிய வகையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகேந்திர பிரதாப் யாதவ் (வயது 52), மற்றும் தீபா ருஹியா (வயது 40) ஆகிய இருவரும் சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறி வருகின்றனர்.
தூண் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.