சென்னையில் தனியார் ரெயில் சேவை: உலகத்தரம் வாய்ந்த ரெயில்கள் அறிமுகம்

சென்னையில் புறநகர் உள்பட பல வழித்தடங்களில் தனியார் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. அதில் உலகத்தரம் வாய்ந்த ரெயில்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.
சென்னையில் தனியார் ரெயில் சேவை: உலகத்தரம் வாய்ந்த ரெயில்கள் அறிமுகம்
Published on

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) நாட்டின் முதல் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை டெல்லி-லக்னோ பாதையில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

தேஜஸ் ரெயில்களில் கட்டணம் மிக அதிகம். தற்போது டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படும் தேஜஸ் ரெயிலில் டெல்லியில் இருந்து லக்னோவுக்கு ரூ.1,215 கட்டணம். லக்னோவில் இருந்து கான்பூருக்கு (73 கி.மீட்டர் தூரம்) ரூ.320.

அதே நேரத்தில் விரைவு ரெயில்களில் கட்டணம் ரூ.525 தான் என்பது குறிப்பிடத்தக்கது. சொகுசான இருக்கை, ஏ.சி. வசதி, இணையதள வசதி, தொலைக்காட்சி வசதி ஆகிய வசதிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில்களில் கட்டணம் கிட்டத்தட்ட விமான கட்டணத்துக்கு இணையாக இருக்கும்.

இந்த சேவை இந்திய ரெயில்வேயில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும். தொடர்ந்து தனியார்கள் மூலம் நாட்டில் 24 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்படும்.

ரெயில்வே அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இது திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரெயில்வே தனது பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்பட்டு உள்ளது.

வழித்தடம், ரெயில் பெட்டிகளை ரெயில்வே துறை வழங்கும். ரெயில்களை இயக்கும் தனியார்கள் கட்டணத்தை நிர்ணயிப்பார்கள். பராமரிப்பு செலவுகளையும் தனியார் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒப்பந்தப்படி ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்தி விட வேண்டும்.

டெல்லி-மும்பை, டெல்லி-லக்னோ, டெல்லி-ஜம்மு / கத்ரா, டெல்லி-ஹவுரா, செகந்திராபாத்-ஹைதராபாத், செகந்திராபாத்-டெல்லி, டெல்லி-சென்னை, மும்பை-சென்னை, ஹவுரா-சென்னை மற்றும் ஹவுரா-மும்பை போன்ற நீண்ட தூரம் மற்றும் ஒரே இரவில் பயணம் செய்வதற்கு மேற்கண்ட வழித்தடங்கள் கண்டறியபட்டு உள்ளன.

அடையாளம் காணப்பட்ட இன்டர்சிட்டி வழிகள் : மும்பை-அகமதபாத், மும்பை-புனே, மும்பை-அவுரங்காபாத், மும்பை-மட்கான், டெல்லி-சண்டிகர் / அமிர்தசரஸ், டெல்லி-ஜெய்ப்பூர் / அஜ்மீர், ஹவுரா-பூரி, ஹவுரா-டாடாநகர், ஹவுரா-பாட்னா, செகந்திராபாத்-விஜயவாடா, சென்னை-பெங்களூரு சென்னை- கோவை, சென்னை-மதுரை மற்றும் எர்ணாகுளம்-திருவனந்தபுரம்.

இவை தவிர, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் செகந்திராபாத் போன்ற முக்கிய நகரங்களில் புறநகர் ரெயில் சேவைகளை இயக்க தனியார் ஆபரேட்டர்களை சேர்க்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

2023-ம் ஆண்டு இந்த வழித்தடங்களில் தனியார் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com