கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு; இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்

கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான ஆய்வுகளை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.
கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு; இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்
Published on

ஐதராபாத்,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான ஆய்வுகள் உலக அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இங்கு ஐதராபாத்தை சேர்ந்த செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்திய ரசாயன தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் கழிவுநீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மூக்கு மற்றும் வாய்வழியாக மட்டுமல்ல, மலம் வழியாகவும் தொற்றை வெளியிடுகிறார்கள் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் தொற்று பரவுவதை மதிப்பிடுவதற்கு கழிவு நீர் மாதிரிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காண்பதிலும், தொற்றுநோயை கட்டுப்படுத்துவதிலும், பரவலை மதிப்பிடுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஐதராபாத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகளை பெற்று விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர். இதில் அங்குள்ள 80 சதவீத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில் சுமார் 2 லட்சம் பேர் வைரஸ் பொருட்களை வெளியேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

ஐதராபாத்தில் 40 சதவீத கழிவுநீரே கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை வந்தடைவதால், இந்த தரவு ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த பயன்படுகிறது. அந்த வகையில் ஏறத்தாழ இந்த எண்ணிக்கை 6.6 லட்சமாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com