அமெரிக்க போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட தெலுங்கானா இளைஞர்; மத்திய அரசுக்கு பெற்றோர் வேண்டுகோள்

தெலுங்கானாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், தனது அறை நண்பருடனான சண்டையில், அமெரிக்க போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
ஐதராபாத்,
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், தனது அறைத் தோழனுடன் ஏற்பட்ட சண்டையில் தெலுங்கானாவைச் சேர்ந்த 30 வயதான முகமது நிஜாமுதீன் என்ற இளைஞர் அமெரிக்க போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் 2016ம் ஆண்டு புளோரிடா கல்லூரியில் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார்.
படிப்பினை முடித்த பிறகு, அவர் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்ற பிறகு கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முகமது நிஜாமுதீனின் தந்தை, தனது மகனுக்கும் அறை தோழனுக்கும் இடையே ஒரு சிறிய விஷயத்திற்காக ஏற்பட்ட கைகலப்பை அடுத்து போலீசார் அவரை சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளார்.
தனது மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று ஹஸ்னுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், எனது மகன் நிஜாமுதீன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள ஏதோ ஒரு மருத்துவமனையில் இருப்பதாகவும் அறிந்தேன்.
போலீசார் அவரை சுட்டுக் கொன்றதற்கான உண்மையான காரணங்கள் எனக்குத் தெரியவில்லை. வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தையும், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தையும் தனது மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.






