

புதுடெல்லி,
ஐதராபாதை தலைமையிடமாகக் கொண்டு, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் செயல்படுகிறது. 'விக்ரம்- எஸ்' என்ற ராக்கெட்டை 2022ல் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய நம் நாட்டின் முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை இந்நிறுவனம் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட 'விக்ரம்-1' என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.
இதை சோதனை முயற்சியாக ஏவ, அதற்கான பணிகள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்தன. இந்நிலையில் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 11.30 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், சற்று தாமதமாக 12.05 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த நிலையில், 'விக்ரம்-1' ராக்கெட் வெற்றி இந்தியாவின் விண்வெளித் துறையை மேலும் வலுப்படுத்தும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இந்தியாவின் விண்வெளி லட்சியம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவின் முதல் தனியார் தயாரிப்பு ராக்கெட்டான 'விக்ரம்-1'-ஐ வெற்றிகரமாக ஏவியதற்காக @SkyrootAerospace நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
விண்வெளித் துறையை அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இது ஒரு உறுதியான முன்னேற்றமாகும். இந்த வெற்றி இந்தியாவின் விண்வெளித் துறையை மேலும் வலுப்படுத்தி, உலக அளவில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.