இந்தியாவின் நீளமான ரெயிலான விவேக் எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை இயக்கம்..!

இந்தியாவின் நீளமான ரெயிலான விவேக் எக்ஸ்பிரஸ் வருகிற நவம்பர் 22 முதல் வாரம் இருமுறை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கவுகாத்தி,

அசாம் மாநிலம் திப்ருகர் நகரிலிருந்து கன்னியாகுமரிக்கு நாட்டின் மீக நீள ரெயிலான 'விவேக் எக்ஸ்பிரஸ்' அதிவேக ரெயில் வாராந்திர ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 19 முதல் செயல்பட்டு வரும் இந்த திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், ஒன்பது மாநிலங்களை ஏறக்குறைய 4,189 கிமீ தூரத்தை 80 மணி நேர பயண நேரத்தில் கடந்து செல்கிறது.

இந்த நிலையில் வருகிற நவம்பர் 22 முதல் விவேக் எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை இயக்கப்படும் என்று வடகிழக்கு எல்லை ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி ரெயில் எண். 15906 (திப்ருகர் - கன்னியாகுமரி) விவேக் எக்ஸ்பிரஸ் தற்போது சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இனி நவம்பர் 22 முதல் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் கூடுதலாக இயக்கப்படும்.

மேலும் ரெயில் எண். 15905 (கன்னியாகுமரி - திப்ருகர்) விவேக் எக்ஸ்பிரஸ் தற்போது வியாழக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது. இனி நவம்பர் 27 முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com