

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2017 என்ற தலைப்பில் போர்ப்ஸ் நாளிதழ் இந்தியாவில் உள்ள 100 முன்னணி பணக்காரர்கள் அடங்கிய வருடாந்திர பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10வது வருடம் ஆக முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 3,800 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.
இப்பட்டியலில் ஏழு பெண்களே உள்ளனர். அவர்களில் 16வது இடத்தில் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பம் உள்ளது. ஜிண்டால் குழுமத்தின் சொத்து மதிப்பு 750 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.
அவரை தொடர்ந்து குப்தா குடும்பம் 345 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 40வது இடத்தில் உள்ளது. தேஷ் பந்து குப்தாவால் லூபின் என்ற மருத்துவம் சார்ந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அவர் கடந்த ஜூனில் மறைந்த பின் அவரது மனைவி மஞ்சு குப்தா அதன் தலைவரானார்.
இந்த பட்டியலில் தாய் மற்றும் மகனான வினோத் மற்றும் அனில் ராய் குப்தா குடும்பம் 311 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 48வது இடத்தில் உள்ளது.
இந்து ஜெயின் மகன்களான சமீர் மற்றும் வினீத் நடத்தி வரும் பென்னட், கோல்மேன் அண்ட் கம்பெனி என்ற ஊடக நிறுவனத்தின் மதிப்பு 300 கோடி அமெரிக்க டாலர் ஆகும். இந்த குடும்பம் 51வது இடத்தில் உள்ளது.
இதேபோன்று உலகின் 3வது மிக பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை டஃபே நிறுவனம் பெற்றுள்ளது. மல்லிகா ஸ்ரீனிவாசன் தலைமையிலான இந்நிறுவனம் 250 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 63வது இடத்தினை பிடித்துள்ளது.
ரெவ்லான் என்ற நிறுவனத்தினை தலைமையேற்று நடத்தி வரும் லீனா திவாரி 219 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் 71வது இடத்தினை பிடித்துள்ளார். இந்நிறுவனம் மருத்துவம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 1978ம் ஆண்டு பயோகான் என்ற மருத்துவ பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் மஜும்தார் ஷா என்ற பெண்மணியால் தொடங்கப்பட்டது. இதன் மதிப்பு 216 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.
இந்தியாவில் தன் முயற்சியால் முன்னணிக்கு வந்த பெண் என்ற பெருமையை பெற்றுள்ள ஷா தொடங்கிய இந்நிறுவனம் 72வது இடத்தில் உள்ளது. ஆசியாவின் மிக பெரிய இன்சுலின் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை மலேசியாவின் ஜோஹர் பகுதியில் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.