அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உள்நாட்டில் கட்டப்பட்ட நீர்மூழ்கி போர்க்கப்பல் 'வகிர்'23-ந் தேதி கடற்படையில் இணைப்பு

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உள்நாட்டில் கட்டப்பட்ட நீர்மூழ்கி போர்க்கப்பலான வகிர் 23-ந் தேதி கடற்படையில் இணைக்கப்படுகிறது.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உள்நாட்டில் கட்டப்பட்ட நீர்மூழ்கி போர்க்கப்பல் 'வகிர்'23-ந் தேதி கடற்படையில் இணைப்பு
Published on

மும்பை, 

இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில் பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து "திட்டம்-75"-ன் கீழ் 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி போர்க்கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த கப்பல்கள் கட்டும் பணி தொடங்கிய நிலையில், ஐ.என்.எஸ். கல்வாரி, கந்தேரி, கரன்ஜ், வேலா ஆகிய 4 நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்கனவே கடற்படையில் இணைக்கப்பட்டு விட்டன.

இந்தநிலையில் "திட்டம்-75"-ன் 5-வது நீர் மூழ்கி போர்க்கப்பலான 'வகிர்' மும்பை மஜ்காவ் கப்பல் கட்டும் தளத்தில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடற்பயிற்சியை தொடங்கியது. கடந்த மாதம் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பல் வருகிற 23-ந் தேதி (திங்கட்கிழமை) முறைப்படி கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. கடற்படை தளபதி ஹரிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

வகிர் என்ற பெயரில் ஏற்கனவே 1973-ம் ஆண்டு கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் சேர்க்கப்பட்டு, அது கடந்த 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றது. இந்தநிலையில் அதே பெயரில் புதிய அவதாரத்துடன் வகிர் கடற்படையில் இணைகிறது. இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உள்நாட்டில் கட்டப்பட்டதாகும்.

கடலில் செல்லும் எதிரி நாட்டு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை இது துல்லியமாக தாக்கும். அதாவது கடலின் மேற்பரப்பு, கடலில் மூழ்கியப்படியும் போர்புரியும் தன்மை கொண்டது. உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளை இது திறன்பட மேற்கொள்ளும்.

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஐ.என்.எஸ். வகிர் இந்திய கடற்படையின் போர் திறனுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com