

புதுடெல்லி,
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்காவும், இஸ் ரேலும் தாக்குதலை தொடங்கின. அதற்கு பதிலடியாக, இஸ் ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்கு தல் நடத்தியது.
2 மாதங்களுக்கு மேலாக சண்டை நீடித்து வருகிறது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய், சமையல் கியாஸ், உரங்கள் ஆகியவை கொண்டு செல்ல சரக்கு கப்பல்கள் பயன்படுத்தும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி விட்டது.
இதனால் எண்ணற்ற நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல். டீசல் விலை உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. வட்டிவிகிதம் அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், எரிப்பொருள் வினியோக சங்கிலித்தொடர் அறுந்து, சர்வ தேச பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 கோடியே 10 லட் சம் பீப்பாய் வளைகுடா கச்சா எண்ணெய் உற்பத்தி முடங்கி உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 8 கோடி டன் திரவ இயற்கை எரிவாயு வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், கடந்த மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
மே 15, 19, 23 மற்றும் இன்று (மே 25) என 4 முறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசு வீதமும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, கடந்த 10 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.2-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7.38ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 107.77-ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 99.55 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், பணவீக்க நாயகன் பிரதமர் மோடியின் அதிரடி தொடருவதாக ராகுல் காந்தி கிண்டலாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
விலையேற்றத்தில் பொருளாதாரப் புயல் வீசும் என்று நான் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால் மோடி, வழக்கம் போல தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்தார். தேர்தல்கள் முடிந்த உடனேயே, பெட்ரோல்-டீசல் விலை ரூ. 8 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வு தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பணவீக்க நாயகன் மோடி மீண்டும் தன் கைவரிசையை காட்டுகிறார்.பெட்ரோல் - டீசல் விலைகளை மோடி அரசு தவணை முறையில் உயர்த்தி வருகிறது.
மக்களின் பாக்கெட் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து சுரண்டப்படுகிறது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி தருவதும், பிறகு பாக்கெட்டை சுரண்டுவதுமே பணவீக்க நாயகனின் வேலை என அதில் பதிவிட்டுள்ளார்.