

பெங்களூரு,
பெங்களூருவை சேர்ந்தவர் பிரிக்சித் தலால் (வயது 43). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று முன்தினம் பெங்களூரு மாநகராட்சி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.
இதற்காக அவரது கை விரலில் ஊழியர்கள் மை வைத்திருந்தனர். வீட்டுக்கு வந்த அவர் சாப்பிடுவதற்காக கையை சோப்பு போட்டு கழுவினார். அப்போது தன் கை விரலில் வைக்கப்பட்டு இருந்த மை அழிந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தான் ஓட்டு போட்ட வாக்குச்சாவடிக்கு சென்று மை அழிந்தது பற்றி அங்கிருந்த அதிகாரிகளிடம் பிரிக்சித் தலால் கூறினார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் போலீஸ் நிலையத்துக்கு சென்று தேர்தல் கமிஷன் மீது அவர் புகார் கொடுத்தார். அதில், ஓட்டு போட்ட பின் விரலில் வைக்கப்படும் மை குறைந்தது 2 வாரங்கள் அழியாமல் இருக்கும், ஆனால் தனது விரலில் வைக்கப்பட்ட மை உடனடியாக அழிந்து விட்டது, எனவே தேர்தல் கமிஷன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.