கர்நாடகாவில் போதிய மழைப்பொழிவு இல்லை: மந்திரி பரமேஷ்வரா பேட்டி

வறட்சி சூழல் பற்றி விரிவான மறுஆய்வை நாங்கள் மேற்கொள்ள உள்ளோம். அதற்கான சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் முன்பே தொடங்கப்பட்டு விட்டன என்றார்.
கர்நாடகாவில் போதிய மழைப்பொழிவு இல்லை:  மந்திரி பரமேஷ்வரா பேட்டி
Published on

பெங்களூரு

கர்நாடகாவில் போதிய மழைப்பொழிவு இல்லை என நிருபர்களிடம் மாநில மந்திரி பரமேஷ்வரா பேட்டியளித்தபோது கூறினார்.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பற்றாக்குறையாக பெய்துள்ளது. இதனால் காவிரி படுகையில் ஹாரங்கியை தவிர மற்ற 3 அணைகளும் நிரம்பாமல் இருந்தன. எனினும், குடகு, சிக்கமகளூரு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன்படி, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர் பிடிப்புப்பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக துணை முதல்-மந்திரி மற்றும் வருவாய் துறை மந்திரியான ஜி. பரமேஷ்வரா சட்டசபையில் இன்று பேசும்போது, கர்நாடகாவில் மல்நாடு மற்றும் கடலோர மாவட்டங்களை தவிர்த்து, பல பகுதிகளில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.

வறட்சி சூழல்

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி நீர் தேக்கங்களில் நீர்மட்டம் நல்ல முறையில் உயர்ந்துள்ளது. மல்நாடு பகுதியில் பெய்த மழையால் இது நடந்துள்ளது. மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வட கர்நாடகாவில் அல்மாதி மற்றும் நாராயண்பூர் நீர் தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.

எனினும், வறட்சியான மற்றும் மழை குறைவான பகுதிகளில் நிலைமை தொடர்ந்து, தீவிர கவலைக்குரிய வகையில் உள்ளது. குடிநீர் கிடைப்பதிலும் சிக்கல் காணப்படுகிறது. இதனால், வறட்சி சூழல் பற்றி விரிவான மறுஆய்வை நாங்கள் மேற்கொள்ள உள்ளோம். அதற்கான சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் முன்பே தொடங்கப்பட்டு விட்டன. இந்த விவகாரம் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com