கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு காப்பீடு திட்டம்; மத்திய அரசு

கொரோனாவால் பெற்றோர் அல்லது காப்பாளரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு காப்பீடு திட்டம்; மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) அறிக்கையின்படி நடப்பு ஆண்டு ஜூன் 30ந்தேதி வரை 30 ஆயிரத்து 71 குழந்தைகள், கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனர். இதற்கிடையே பி.எம். கேர்ஸ்-ல் குழந்தைகளுக்கான நலத்திட்டம் கடந்த மே 29ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கம், கொரோனாவில் தாய், தந்தை இருவரையும் இழந்த அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலன் காப்பது ஆகும். மேலும் இவர்களுக்கு 23 வயதை எட்டும்போது ரூ.10 லட்சம் வழங்குதல், மாதந்தோறும் உதவித்தொகை ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

இதுபற்றி மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா தொற்றால் பெற்றோரை அல்லது காப்பாளர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு 18 வயதுவரை ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் ஆயுஷ்மான் பாரத் மூலம் செயல்படுத்தப்பட்டு அதற்கான காப்பீடு தொகை பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் செலுத்தப்படும். கொரோனாவால் பெற்றோரை அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைக்கு 18 வயது வரை மாத உதவித்தொகையும், 23 வயது அடையும்போது ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com