

புதுடெல்லி
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது. இதில் இந்தியாவை சேர்ந்த 40 துணை ராணுவப்படை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர்.
இந்த கொடூரச் சம்பவத்திற்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவனாக விளங்கும் மசூத் அசாரை, தொடர்ந்து பாதுகாப்பதிலேயே பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருகிறது. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்த மசூத் அசார், பாகிஸ்தானில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தான்.
ஆனால் ஜெய்ஷ் முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை காணவில்லை என்று பாகிஸ்தான் அரசு பொறுப்பற்ற முறையில் அறிவித்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் இப்படி பாகிஸ்தான் அறிவித்து உள்ளது.
நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டத்தில் இதற்கு எதிராக பிரச்சினை எழுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் மசூத் அசார் பஹவல்பூரில் வெடிகுண்டு தடுப்பு வீட்டில் பாதுகாப்பாக வசித்து வருவதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உளவுத்துறை தகவல்படி பாகிஸ்தானில் ரயில்வே இணைப்பு சாலையில் உள்ள மார்கஸ்-இ-உஸ்மான்-ஓ-அலி என்ற பயங்கரவாதக் குழுவின் பஹவல்பூர் தலைமையகத்தின் பின்னால் உள்ள வெடிகுண்டு தடுப்பு வீட்டில் மிக உயர்ந்த பாதுகாப்பில் பதுங்கி உள்ளான் என கூறப்படுகிறது.
மசூத் அசாருக்கு அறியப்பட்ட மற்ற மூன்று முகவரிகள் உள்ளன:
கவுசர் காலனி, பஹவல்பூர்; மதரஸா பிலால் ஹப்ஷி, பன்னு, கைபர்-பக்துன்க்வா; மற்றும் அதே மாகாணத்தில் உள்ள மதரஸா மஸ்ஜித்-இ-லுக்மான், லக்கி மார்வாட்.
பதான்கோட் விமானநிலையம் மீது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு 2016-ல் நடத்திய தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட மொபைல் எண்களில் ஒன்று பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத தொழிற்சாலையுடன் நேரடியாக தொடர்புடையது ஆகும்.
பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) கூட்டத்தில், மசூத் அசார் காணவில்லை என்று பாகிஸ்தான் கூறக்கூடும் என்ற சமீபத்திய தகவல் அடிப்படையில் தற்போது மசூத் அசார் பதுங்கி உள்ள இடம் தெரியவந்து உள்ளது.