கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் தீவிரம்

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் தீவிரம்
Published on

பெங்களூரு,

மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த 10 நாட்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ய கர்நாடகத்தில் சுகாதாரத்துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகத்திற்கு 29 ஆயிரத்து 451 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் 1 லட்சத்து 8 மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தடுப்பூசிகளை சேகரித்து வைக்க 2,855 குளிர்பதன கிடங்குகள் உள்ளன. புதிதாக பெங்களூரு, சிவமொக்கா, பல்லாரி மாவட்டங்களில் மண்டல குளிர்பதன கிடங்குகள் அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. கர்நாடகத்தில் 45 மாவட்ட ஆஸ்பத்திரிகள், 146 தாலுகா ஆஸ்பத்திரிகள், 206 சுகாதார மையங்கள், 2,300 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன.

இங்குள்ள குளிர்சாதன வசதியை பயன்படுத்தி தடுப்பூசிகளை சேகரித்து வைக்க முடியும். மத்திய அரசின் உத்தரவுப்படி முதல் கட்டமாக தடுப்பூசி பெற தகுதியானவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை தயாரித்துள்ளது. தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சியும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. முதலில் முன்கள பணியாளர்களான மருத்துவத்துறையில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு தடுப்பூசி போட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com