கட்சி மாறுபவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது- நடிகை ரோஜா

விஜய் கட்சியில் இணைய போவதாக வெளியான தகவலை நடிகை ரோஜா திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார்.
கட்சி மாறுபவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது- நடிகை ரோஜா
Published on

நகரி,

தமிழகத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரோஜா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுலாத்துறை மந்திரியாகவும் ரோஜா பதவி வகித்து வந்தார். அண்மையில் நடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜாவும் படுதோல்வியை சந்தித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நடிகை ரோஜா சேரப்போவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு விளக்கம் அளித்த நடிகை ரோஜா, "நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் தான் இணைய இருப்பதாக வரும் செய்திகளை திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக ரோஜா மேலும் கூறியதாவது:- சுயலாபத்திற்காக கட்சி மாறுபவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது. உயிர் உள்ளவரை நான் ஜெகன்மோகன் ரெட்டிக்காகவே பணியாற்றுவேன். அவரும் கட்சியும் என் மீது வைத்த நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன். வெற்றி தோல்வி என்பது அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சாதாரணம்தான்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com