மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை தொடங்கியது

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவையை வழங்கி முதல்-மந்திரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை தொடங்கியது
Published on

இம்பால்,

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அதிகரித்து வந்த கலவரத்தை கட்டுப்படுத்த மே மாதம் 3-ம் தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் கலவரக்காரர்களுக்கு இடையே தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் கலவரம் படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில் மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் கலவரத்தால் தடை செய்யப்பட்ட இணைய சேவை இன்று முதல் மீண்டும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்தியா-மியான்மர் எல்லையில் இருபுறமும் வசிக்கும் மக்கள் எந்த ஆவணமும் இல்லாமல்  இரு நாடுகளுக்குள் 16 கி.மீ. தூரம் செல்ல அனுமதிக்கும் சுதந்திர இயக்க ஆட்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, மாநிலத்தில் கலவரத்தின்போது போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் இணையத்தில் வேகமாக பரவின. எனவே அதனை கட்டுப்படுத்த இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com