

புதுடெல்லி,
மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார்.
மத்திய வெளியுறவு ராஜாங்க மந்திரியாக பதவி வகிக்கும் எம்.ஜே. அக்பர் அரசியலுக்கு வரும் முன்பாக பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு கீழ் பணிபுரிந்தபோது எம்.ஜே.அக்பர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 2 பெண் பத்திரிகையாளர்கள் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தனர்.
பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் தங்களுக்கு நேரிட்ட பாதிப்பை வெளிப்படுத்தும் மீ டூ(நானும்தான்) இயக்கம் மூலம் சமீப காலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல்தான் எம்.ஜே.அக்பர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் சி.என்.என். டெலிவிஷனில் செய்தியாளராக பணியாற்றி வரும் மஜ்லி டி புயூ காம்ப் என்ற அமெரிக்க பெண்ணும் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
அதில், அவர் கூறுகையில், எனக்கு 18 வயதாக இருந்தபோது அக்பருக்கு கீழ் பணியாற்றினேன். ஒருமுறை எனது நன்றியை தெரிவிப்பதற்காக அவருக்கு கையை நீட்டினேன். ஆனால் 55 வயதான அவரோ என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். தனது நாக்கை எனது வாயில் வைத்து முத்தமிட்டு விட்டார் எனக் கூறி இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது அடுத்தடுத்து பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதால் இதுபற்றி விசாரணை நடத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பா.ஜனதா தலைவர் அமித்ஷா டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், இந்த குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பதை ஆராயவேண்டும். இந்த பதிவின் உண்மைத் தன்மையையும் கண்டறியவேண்டும். அதேபோல் அந்த பதிவை வெளியிட்ட நபர் யார் என்பதும் கண்டறியவேண்டும். யாருடைய பெயரை பயன்படுத்தியும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பதிவிட இயலும். எனினும் மந்திரி மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
5 மாநில சட்டசபை தேர்தலில் இப்பிரச்சினை பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பா.ஜனதா விசாரிக்க முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஊடகங்களில் பணிபுரியும் பெண் செய்தியாளர்கள் பெண்களுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பணியிடங்களில் பெண்கள் கண்ணியமாக பணியாற்ற பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறைப்படி செயல்படுத்தக் கோரியும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரை பதவி நீக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.