'தனக்கு ஐபோன், காதலனுக்கு பைக்': 13 வயது சிறுமி தன் தாத்தாவை கொன்ற கொடூரம்: வெளியான பகீர் தகவல்

தாத்தா அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் அலமாரியில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
'தனக்கு ஐபோன், காதலனுக்கு பைக்': 13 வயது சிறுமி தன் தாத்தாவை கொன்ற கொடூரம்: வெளியான பகீர் தகவல்
Published on

திருவனந்தபுரம்,

ஐபோன் வாங்கும் ஆசையில் காதலனை ஏவி தாத்தாவை தீர்த்துக்கட்டியதாக அவரது 13 வயது பேத்தி கைது செய்யப்பட்டார்.

13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவற்றாபகுதியில் வாடகை வீட்டில் கொல்லத்தை சேர்ந்த 65 வயது முதியவர் வசித்து வந்தார். அங்கு மனைவி, மகள் மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது பேத்தியும் தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் மற்றும் அவரது 13 வயது பேத்தி மட்டும் வீட்டில் இருந்தனர். முதியவரின் மகள் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு துணையாக முதியவரின் மனைவியும் சென்றிருந்தார்.

நகை, பணம் கொள்ளை

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கொடூரமாக கொல்லப்பட்டு ஓலை பாயில் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அவருடைய கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதுதவிர அவர் அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் அலமாரியில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

காதலனை ஏவி பேத்தியே கொன்றார்

இந்த கொலை சம்பவம் குறித்து ஹரிப்பாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். செல்போன் டவர் மூலம் சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதாவது, 13 வயது பேத்தியுடன் ஒருவர் பேசியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுவனை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணையில் 13 வயது பேத்தி, காதலனை ஏவி தனது தாத்தாவையே கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

கொடூர சிந்தனை

13 வயது பேத்தி ஒருவரை காதலித்துள்ளார். அவருக்கும் வயது 18-க்கும் குறைவு. செல்போனில் அடிக்கடி பேசி இருவரும் காதலை வளர்த்துள்ளனர். அந்த சமயத்தில் பேத்திக்கு ஐபோன் வாங்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. மேலும் காதலனும், புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவரும் பணத்துக்கு என்ன செய்வது? என்று யோசித்த போது தான், அவர்களுக்கு கொடூர சிந்தனை உதித்தது.

அப்போது தனது தாத்தாவை காதலன், நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து கொன்றுவிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பேத்தி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com