

புதுடெல்லி
சமீபத்தில் ஐ.ஆர்.ஐ.எஸ். தேனா என்ற ஈரானிய கப்பல் இந்தியாவில் நடந்த கடற்படை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பியபோது, சர்வதேச நீர்வழிகளில் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலால் தாக்கி கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. அதில் இருந்தவர்களில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் மக்களவையில் இன்று கூறும்போது, இந்த சூழலில் ஈரானின் தலைமையை தொடர்பு கொண்டு கூட நாம் பேச முடியாது. ஆனால், ஐ.ஆர்.ஐ.எஸ். லாவன் என்ற ஈரான் கப்பல் சர்வதேச கடற்படை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பியபோது அதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவை தொடர்பு கொண்டது ஈரான். இது ஐ.ஆர்.ஐ.எஸ். தேனா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சில நாட்களுக்கு முன் நடந்தது. அப்போது, கொச்சியில், ஈரானின் கப்பலை நிறுத்தி கொள்ள மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த கப்பலின் 183 ஊழியர்களும் கொச்சி கடற்படை தளத்தில் தற்போது பாதுகாப்பாக தங்கியுள்ளனர்.
மேற்காசியாவில் மோதலுக்கு இடையே, கொச்சியில் ஈரான் நாட்டின் ஐ.ஆர்.ஐ.எஸ். லாவன் கப்பலை நிறுத்த இந்தியா அனுமதி அளித்ததற்காக அந்நாட்டின் தலைமை இந்தியாவிடம் நன்றி தெரிவித்து கொண்டது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் மக்களவையில் இன்று கூறினார்.