

புதுடெல்லி,
கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியாது நீடிக்கிறது. மொசூல் நகரில் இப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரானது முடிந்துவிட்டது என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இதனையடுத்து இந்தியர்களின் நிலை என்பது தொடர்பான கேள்வி அதிகரித்து உள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஈராக் வெளியுறவுத்துறை மந்திரி அல் ஜஃபாரியிடம் இவ்விவகாரம் தொடர்பாக சுஷ்மா சுவராஜ் எழுப்பினார். இந்தியர்களை தேடி கண்டுபிடிக்க உதவுமாறு இந்தியா கேட்டுக் கொண்டு உள்ளது.
இந்நிலையில் மொசூலில் கடத்தப்பட்ட இந்தியர்கள் உயிருடன் உள்ளனரா, உயிரிழந்தனரா என்பது குறித்து போதிய தகவல் இல்லை என ஈராக் கூறிஉள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அல் ஜஃபாரி, மொசூலில் கடத்தப்பட்ட இந்தியர்கள் உயிருடன் உள்ளனரா இல்லை உயிரிழந்தனரா என்பது தொடர்பாக எங்களிடம் போதிய தகவல்கள் கிடையாது, இப்போது இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு தகவலையும் தெரிவிக்க முடியாது, என கூறிஉள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா அரசுடன் ஈராக் தொடர்பில் உள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னதாக பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தொழிலாளர்களை கண்டுபிடிக்க ஈராக் அரசு தொடர்ந்து நடவடிக்கையை எடுக்கும் என கூறிஉள்ளார் அல் ஜஃபாரி.
முன்னதாக ஈராக் தூதரகம், இந்தியர்களை கண்டுபிடிக்கும் பணியானது நடந்து வருகிறது, அவர்களை கண்டுபிடிப்பதில் இந்திய மற்றும் ஈராக் அதிகாரிகள் இணைந்து செயல்படுகிறார்கள் என தெரிவித்து இருந்தது.