ஊரடங்கு காலத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் சாத்தியமா? - மத்திய அரசு பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஊரடங்கு காலத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் சாத்தியமா? என மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் சாத்தியமா? - மத்திய அரசு பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள், வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் பயன் அடையும் வகையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முன்கூட்டியே அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வக்கீல்கள் ரீபக் கன்சால், சஞ்ஜய் குமார் விசன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.வி. ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் நேற்று காணொலி மூலம் விசாரித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

மத்திய அரசு ஏற்கனவே ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஜூன் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் அறிமுகப்படுத்த பரிசீலனை செய்து வருகிறது. இதில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை.

இருப்பினும் தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலையை கருத்தில் கொண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உதவும் வகையில் இந்த திட்டத்தை முன்கூட்டியே அமல்படுத்த முடியுமா? என்று மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறி மனுவை முடித்து வைப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com