

பெங்களூரு,
இஸ்ரோ நிறுவனம் இந்திய செயற்கை கோள்களைகளையும், பிற நாடுகள் தயாரிக்கும் செயற்கை கோள்களையும் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் (ஆந்திரா) உள்ள ஏவுதளங்களில் இருந்து விண்ணுக்கு செலுத்தி வருகிறது. அங்கு இரு ஏவுதளங்கள் உள்ளன.
எதிர்கால தேவை, செலவினம், பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு மற்றொரு ஏவுதளம் அவசியமாகிறது. அந்த ராக்கெட் ஏவுதளம் குலசேகரபட்டினத்தில் அமைய இருக்கிறது.
தென் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட கடலோர பகுதிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு மிக அருகில் உள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கலாம் என்று முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து, குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. சிவன், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் ஒப்புதல் அளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அங்கு மிக விரைவில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடியும் என்று கூறியுள்ளார்.