

புதுடெல்லி,
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி, கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆகம கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தின்போது ஆகம விதிகளை கட்டாயமாக பின்பற்றக்கோரி அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் தாக்கல் செய்த ரிட் மனுவுடன் இணைக்கவும் உத்தரவிட்டது.