

புதுடெல்லி,
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து விவாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. நாட்டின் எந்தவொரு பிரதமரும், தான் ஏதேனும் ஒரு வகையில் சமரசத்திற்கு உள்ளாகியிருந்தால் ஒழிய இத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க மாட்டார். நேற்று, பிரதமர் உரையாற்றுவதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் ஆற்றல் குறைந்திருந்தது, அவரது பேச்சு எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த மசோதாவை நிறைவேற்ற முயன்றதே ஒரு தெளிவான தவறு என்பதை அவரும் உணர்ந்திருந்தார்.
எனவே, நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே, என் அலைபேசியில் தேதியை பார்த்தபோது, ஏப்ரல் 16 என இருந்தது. உடனே நான், அடடா, என்னவொரு விசித்திரம் என்று வியந்தேன். அனைத்து புதிருக்குமான முழு விடையுமே இந்த 16 எனும் எண்ணில்தான் இருக்கிறது. யாருக்காவது இந்த 16 எனும் எண்ணின் புதிருக்கான விடை தெரிந்தால் எக்ஸ் பக்கத்தில் பதிவிடலாம்” எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தி ஏன் 16 எனும் எண்ணை குறிப்பிட்டு பேசுகிறார். 16ல் என்ன இருக்கிறது? எனும் கேள்விகளும், பல்வேறு தரப்பின் கருத்துகளும் தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.
இந்தநிலையில் இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
"இது ஒரு புதிர், பதிலை அவ்வளவு எளிதில் சொல்லிவிட மாட்டேன்" என கூறிவிட்டு சென்றார்.