காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்படுவது சரியல்ல; கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேச்சு

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்படுவது சரியல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்படுவது சரியல்ல; கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேச்சு
Published on

பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில செயல் தலைவராக ராமலிங்கரெட்டி பொறுப்பு ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

ரூ.90 ஆயிரம் கோடி கடன்

கர்நாடகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணிநேரத்தில் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதன்பிறகு, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி முதல்-மந்திரி பதவிக்கு எடியூரப்பா வந்துள்ளார். நான் முதல்-மந்திரியாக இருந்த போது, எனது தலைமையிலான அரசு எப்போது செயல்பட தொடங்கும் என்று பா.ஜனதாவினர் கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு செயல்படாமல் இருக்கிறது. எடியூரப்பா பஸ் பழுதாகி நிற்கிறது. எப்போது புறப்படும் என்று தெரியவில்லை. பழுதாகி அப்படியே நின்று விடும் என்று நினைக்கிறேன்.

பட்ஜெட்டில் ரூ.52 ஆயிரம் கோடி கடன் வாங்க இருப்பதாக எடியூரப்பா கூறி இருந்தார். தற்போது ரூ.90 ஆயிரம் கோடியை எடியூரப்பா தலைமையிலான அரசு கடன் வாங்கியுள்ளது.

மக்கள் பாடம் புகட்டுவார்கள்

எடியூரப்பா தலைமையிலான அரசு மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. ஊழலில் மட்டுமே ஈடுபடுகிறது. மத்திய பா.ஜனதா அரசும் ஊழலில் ஈடுபட்டு வருகிறது. எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து நிறுத்தப்படுகிறது. எனது தலைமையிலான அரசு ஏழை மக்களுக்கு 7 கிலோ அரிசியை இலவசமாக வழங்கியது. தற்போது 3 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது.

அந்த 3 கிலோ அரிசியையும் விரைவில் நிறுத்தி விடுவார்கள். எனது தலைமையிலான அரசில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை நிறுத்துவது சரியல்ல. மக்கள் நலத்திட்டங்களை நிறுத்துவதன் மூலம், எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com