2 நாள் பயணமாக இத்தாலி பிரதமர் 2-ந் தேதி இந்தியா வருகை; பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 2 நாள் பயணமாக வருகிற 2-ந் தேதி (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார்.
2 நாள் பயணமாக இத்தாலி பிரதமர் 2-ந் தேதி இந்தியா வருகை; பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை
Published on

ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்தியா, இத்தாலி இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 75-வது ஆண்டை இரு நாடுகளும் இந்த ஆண்டு கொண்டாடுகின்றன. இந்த நிலையில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 2 நாள் பயணமாக வருகிற 2-ந் தேதி (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார். அவருடன் துணை பிரதமரும், வெளியுறவு மந்திரியுமான ஆன்டனியோ தாஜன் மற்றும் உயர்மட்ட வர்த்தக குழுவும் இந்தியா வருகிறது. டெல்லி வரும் மெலோனி அன்று பிற்பகலில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசுகிறார்.

மோடி-மெலோனி பேச்சுவார்த்தை

மேலும் வருகிற 3 மற்றும் 4-ந் தேதிகளில் நடைபெறும் இந்தியாவின் ராய்சினா பேச்சுவார்த்தையில் தலைமை விருந்தினராகவும் மெலோனி பங்கேற்கிறார். புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த இந்தியாவின் முக்கிய பேச்சுவார்த்தை இதுவாகும்.

இதற்கிடையே டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசும் இத்தாலி பிரதமர், ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கிறார். மேலும் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த 2020-ம் ஆண்டு காணொலி மூலம் நடந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பும் விவாதிக்கிறது.

வர்த்தக மாநாடு

முன்னதாக இந்தியா-இத்தாலி இடையேயான வட்ட மேஜை வர்த்தக மாநாடு 2-ந் தேதி நடக்கிறது. இதில் மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் மற்றும் இத்தாலி துணை பிரதமர் தாஜன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இத்தாலி பிரதமரின் இந்திய வருகையால் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால உறவுகள் மேலும் வலுப்படும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இரு நாடுகளும் பல்வேறு மன்றங்ளில் நெருக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com