

ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.
தற்போது நீண்ட நேரமாகியும் துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தீவிரவாதிகளை தேடும் பணியில் சோபியான் போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.