நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த சீனியர்கள்... ஜாதவ்பூர் மாணவர் தற்கொலையில் பகீர் தகவல்

ராகிங்கில் இருந்து தப்பிக்க, மாணவர் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு ஓடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த சீனியர்கள்... ஜாதவ்பூர் மாணவர் தற்கொலையில் பகீர் தகவல்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை முதலாமாண்டு மாணவர், கடந்த 9ம் தேதி பல்கலைக்கழக விடுதியின் 2வது மாடியில் இருந்து விழுந்து இறந்துபோனார். இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மாணவனை கடுமையாக ராகிங் செய்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என 13 பேரை கைது செய்துள்ளனர். விடுதி ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணையில் அந்த மாணவரை கடுமையாக ராகிங் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மாணவரை நிர்வாணமாக்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ராகிங் செய்ததாகவும், அவர்களின் கொடுமையில் இருந்து தப்பிக்க, ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு ஓடியதாகவும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 13 பேரில் 12 பேருக்கு எதிரான ஆதாரத்தை போலீசார் திரட்டி உள்ளனர். குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வது குறித்து போலீசார் பரிசீலித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com