

இந்தியா முழுவதும் பசு, கடவுளின் பெயரில் கும்பல் தாக்குதல் கொடூரமான முறையில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தப்ரீஸ் எனும் 22 வயது இளைஞரை ஒரு கும்பல் பைக் திருடியதாக கடந்த வாரம் கொடூரமாக தாக்கியது. அவரை தாக்கிய கும்பல் ஜெய்ஸ்ரீராம், ஜெய் அனுமன் என்ற கூறுமாறு கட்டாயப்படுத்தியது. இளைஞர் தப்ரீஸை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இளைஞர் உயிரிழந்தார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராம நாமத்தை அன்பால் சொல்ல வேண்டும், வன்முறையால் அல்ல என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
டெல்லியில் ஹஜ் பணிகள் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசுகையில், ஜார்க்கண்டில் இஸ்லாமிய இளைஞரை ஜெய் ஸ்ரீராம் என்று கூற சொல்லி ஒரு கும்பல் தாக்கியுள்ளது. ஜெய் ஸ்ரீராம் என்ற ராம நாமத்தை ஒருவரை நாம் அன்பால், அரவணைப்பால் சொல்ல வைக்க வேண்டும். இதுபோன்று வன்முறையால் கிடையாது. இதுபோன்ற சம்பவங்களை நாம் நியாயப்படுத்த முடியாது. மத்திய அரசு அனைவருக்கும் வளர்ச்சி என்ற திட்டத்தை முன்வைத்து செயல்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் நோக்கம், நாட்டில் உருவாகியுள்ள ஒற்றுமையான, சுமூகமான சூழலை சிதைக்க வேண்டும் என்பதுதான். இதுபோன்ற சம்பவங்களை அரசு கடுமையாக எதிர்க்கும். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.