

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பேசியிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் இரு தலைவர்களின் கருத்தால் கட்சிக்குள் கடும் அதிருப்தி ஏற்பட்டது. அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரசிலிருந்து விலக விரும்புபவர்கள் விலகலாம் என ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சசிதரூருக்கு மறைமுகமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வீரப்ப மொய்லி பேசுகையில், ஜெய்ராம் ரமேஷ், சசிதரூர் இருவரும் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது மிகவும் மோசமான ரசனையாகும். அவர்கள் இருவரும் சேர்ந்து பா.ஜனதாவுடன் தங்களை சமரசம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதுபோன்ற கருத்துக்களை கூற விரும்புபவர்கள் காங்கிரஸ் கட்சிக்கும், தலைமைக்கும் சேவை செய்யமாட்டார்கள் என்பதுதான் என்னுடைய கருத்தாகும். அமைச்சராக இருந்த போது அதிகாரத்தை அனுபவித்தவர்கள் எதிர்க்கட்சியானதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க முயற்சி செய்கிறார்கள்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறை ஆட்சியில் இருந்த போது, கொள்கைகள் பல நேரங்களில் செயல் இழந்ததற்கும், பல நேரங்களில் அரசின் கொள்கை நிர்வாகம் செயல் இழந்ததற்கும் ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பு ஏற்க வேண்டும். சசிதரூர் கருத்தை பார்த்தால் அவர் ஒருபோதும் முதிர்ச்சியான அரசியல் கட்சி தலைவராக கருத முடியாது. சசிதரூர் அடிக்கடி கூறும் கருத்துக்கள், அறிக்கைகள் நாளேடுகளிலும், ஊடகங்களிலும் அவரின் பெயர் இடம் பெற வேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது.
இதுபோன்றவர்களுக்கு எதிராக கட்சி ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே செல்ல விரும்புபவர்கள் நேரடியாக கூறிவிட்டு செல்லலாம். அதற்காக கட்சிக்குள் இருந்து கொண்டே, காங்கிரஸ் கட்சியையும், சித்தாந்தத்தையும் நாசப்படுத்த வேண்டாம். காங்கிரஸ் கட்சியை அனைத்து மட்டத்திலும் சீரமைக்க வேண்டியதுள்ளது. கட்சிக்கு புத்துயிரளிக்க வேண்டிய பொறுப்பு கட்சியின் தலைமைக்கு இருக்கிறது. இவ்விவகாரத்தில் எந்தஒரு மாற்றமும் கிடையாது.
விரைவில் 3 மாநில தேர்தல் வரவுள்ளதால் இந்நடவடிக்கையில் தாதமம் ஏற்படக்கூடாது. தேர்தலை காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் மன்னிப்பு அளிக்கிறோம். காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா மரியாதையுடனும், அச்சத்துடன் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சிகள் குறித்து பா.ஜனதாவுக்கு பயம் இல்லாமல் போய்விடும் எனக் கூறியுள்ளார்.