

ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை, முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை 6 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
தேர்தல் நடைபெற உள்ள அனைத்து வார்டுகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள 384 வார்டுகளில், 7 வார்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ளன. மொத்தம் 1095 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அவர்களுள் 65 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 56 தொகுதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அங்கு தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வெறும் 8.3 சதவீதம் வாக்குகளே பதிவாகியிருந்தன. சட்டப்பிரிவு 35ஏ தொடர்பாக, முக்கிய அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை இத்தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கெனவே அறிவித்து விட்டது நினைவிருக்கலாம்.