

புதுடெல்லி,
ஜார்க்கண்டில் பா.ஜனதா அரசின் பதவி காலம் வரும் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே அதற்குள் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த சூழலில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்டமாக நவம்பர் 30-ம் தேதி 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 7-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும், டிசம்பர் 12-ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும், டிசம்பர் 16-ம் தேதி 4-ம் கட்ட தேர்தலும், டிசம்பர் 20-ம் தேதி 5-ம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 13-ம் தேதி தொடங்குகிறது. என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலின் போது நாட்டிலேயே முதல் முறையாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
எனவே வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் மட்டுமே தபால் வாக்கு அளித்து வந்த நிலையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.