

ஜார்க்கண்ட்,
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா புயல் சமீப நாட்களாக இந்தியாவில் மையம் கொண்டிருக்கிறது. முதல் அலையை விட பல மடங்கு வீரியமாக அடித்து வரும் இந்த அலையில் லட்சக்கணக்கில் தினந்தோறும் பாதிக்கப்படும் நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் மருத்துவமனைகள் திக்குமுக்காடுகின்றன. உள்ளே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவற்றின் தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் மருத்துவமனை நிர்வாகங்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.
கொரோனாவின் இத்தகைய கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் பயங்கரமான சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், மக்கள் இயங்குவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவுக்கும், மக்களுக்குமான இடைவெளியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏப்.22 முதல் 29 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்றும் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என ஜார்க்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.