ஜார்க்கண்டில் ருசிகரம்: 11-ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி மந்திரி

ஜார்க்கண்டில் 11-ம் வகுப்பு படிப்பதற்காக கல்வி மந்திரி விண்ணப்பித்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்டில் ருசிகரம்: 11-ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி மந்திரி
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் இருக்கிறார். இவரது மந்திரி சபையில் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் கல்வி மந்திரியாக இருப்பவர் ஜகர்நாத் மாதோ (வயது 54). இவர் 10-ம் வகுப்பு வரையே படித்துள்ளார்.அதுவும் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ச்சியாக பள்ளிக்குச் செல்ல முடியாததால் தனது 29 வயதில்தான் பள்ளி இறுதியாண்டு தேர்வை எழுதி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இந்த சூழலில் ஒரு மாநிலத்தின் கல்வியையே தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவருக்கு உரிய கல்வித்தகுதிவேண்டாமா என்று ஜகர்நாத் மந்திரியாக பதவியேற்றது முதலே அவர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கின. இந்தநிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜகர்நாத் அதிரடியான முடிவை எடுத்துள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தனது படிப்பை தொடர அவர் முடிவு செய்துள்ளார். ஆம் 11-ம் வகுப்பில் சேர்ந்து படிப்பதற்கு பள்ளி ஒன்றில் விண்ணப்பித்துள்ளார். இதுபற்றி ஜகர்நாத் மாதோ கூறியதாவது:-

யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. விட்ட இடத்தில் இருந்து படிப்பைத் தொடங்கவுள்ளேன். என் மீதான விமர்சனங்கள் தான் கல்வி கற்க ஊக்கமளித்துள்ளன.இனி ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வித்துறையை மட்டுமல்ல, எனது கல்வியையும் சேர்த்துக் கவனிக்கப் போகிறேன். 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளேன். உயர்கல்வி கற்கவும் ஆசையுள்ளது. முதலில் எனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்வேன். பின்னர் பட்டதாரி ஆவது பற்றி யோசிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com