

ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் ஹிலால் பகுதியில் இரும்பு உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆலையின் கேப்டிவ் பவர் பிளாட் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
மேலும், தீ விபத்தில் சிக்கிய 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்த 3 ஊழியர்களும் ஆலையில் பணியாற்றி வந்த என்ஜினியர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.