

லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம், முசாப்நகரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர், கடந்த 4 மாதங்களில் 11 வழக்குகளில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.
வரதட்சிணை கேட்டு மனைவியை தீயிட்டு எரித்துக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு மரண தண்டனை விதித்ததன் மூலம், அவரது நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
முசாப்நகர் கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், வரதட்சிணை கேட்டு தராததால் மனைவி ஷெஹஸாதியை அவரது கணவர் நதீம் தீயிட்டு எரித்துக் கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 4 மாதங்களாக நீதிபதி ரவி குமார் திவாகர் விசாரித்து வந்தார். விசாரணை நிறைவடைந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன்பு ஷெஹஸாதி அளித்த மரண வாக்குமூலத்தை முக்கிய ஆதாரமாகக் கொண்டு, நதீமுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பையும் சேர்த்து, கடந்த 4 மாதங்களில் 11 வழக்குகளில் 23 பேருக்கு நீதிபதி ரவி குமார் திவாகர் மரண தண்டனை விதித்துள்ளார்.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது அமர்வு முன்பு நிலுவையில் இருந்த 100 கொலை வழக்குகளின் விசாரணை, மாவட்ட குற்றவியல் நீதிபதி வீரேந்திர குமார் சிங்கின் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
தான் விசாரிக்கும் வழக்குகளில் பெரும்பாலும் மரண தண்டனை விதிப்பதாக வழக்குரைஞர்கள் மற்றும் மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்த வழக்குகள் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
வரதட்சிணை கொலை வழக்கில் தீர்ப்பளித்த பின்னர் பேசிய நீதிபதி ரவி குமார் திவாகர், மாபியாக்கள், கிரிமினல்கள் மற்றும் தாதாக்களிடம் இருந்து வரும் அழுத்தங்களுக்கு அஞ்சி தனது நீதித்துறை கடமையிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.
“கோழை நீதிபதி” என்று அழைக்கப்படுவதை கேட்பதைக் காட்டிலும், மரணத்தை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனது பெற்றோர் சிறு வயது முதலே, “கடவுளுக்கு மட்டுமே அச்சப்பட வேண்டும்; வேறு யாருக்கும் அச்சப்படத் தேவையில்லை” என்று தன்னை வளர்த்ததாக நீதிபதி தெரிவித்தார்.
அதன் காரணமாகவே மாபியாக்கள், ரவுடிகள் மற்றும் தாதாக்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் நீதித்துறை கடமையைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
தனக்கு மாபியாக்கள் மற்றும் கிரிமினல்களிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் நீதிபதி ரவி குமார் திவாகர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அமர்வு முன்பு விசாரணையில் இருந்த 100 கொலை வழக்குகள், மாபியாக்கள் மற்றும் கிரிமினல்களின் நலன்களுக்காக வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.