‘இஸ்ரோ’ புதிய தலைவராக கே.சிவன் நியமனம்

இஸ்ரோ புதிய தலைவராக பிரபல விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
‘இஸ்ரோ’ புதிய தலைவராக கே.சிவன் நியமனம்
Published on

புதுடெல்லி,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக ஏ.எஸ்.கிரண் குமார் பணியாற்றி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 12ந் தேதி நியமிக்கப்பட்ட இவர், ஓய்வு பெற உள்ளார்.

இதையடுத்து, இஸ்ரோ புதிய தலைவராக பிரபல விஞ்ஞானி கே.சிவன் நேற்று நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு நியமனங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தது. 3 ஆண்டுகளுக்கு அவர் இப்பொறுப்பை வகிப்பார். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

விஞ்ஞானி கே.சிவன், தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

விஞ்ஞானி கே.சிவன், தமிழ்நாட்டில் நாகர்கோவில் அருகே உள்ள வல்லங்குமாரவிளையை சேர்ந்தவர். 1980ம் ஆண்டு, சென்னையில் உள்ள எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்கில் பட்டம் பெற்றார். 1982ம் ஆண்டு, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்கில் முதுகலை பட்டம் பெற்றார்.

2006ம் ஆண்டு, மும்பை ஐ.ஐ.டி.யில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்கில் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.

1982ம் ஆண்டு, இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். பி.எஸ்.எல்.வி. திட்டத்தில் பணியாற்றினார். பல்வேறு பத்திரிகைகளில் விஞ்ஞான கட்டுரைகள் எழுதி உள்ளார்.

ஏராளமான விருதுகளும் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம், 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம், விஞ்ஞானி கே.சிவனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. 1999ம் ஆண்டுக்கான ஸ்ரீ ஹரிஓம் ஆசிரமம் டாக்டர் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருதும் அவர் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com