ஏர் கூலரில் மின்சாரம் பாய்ந்து தாய், மகள் பலி

தெலுங்கானாவில் ஏர் கூலரில் மின்சாரம் பாய்ந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் கூலரில் மின்சாரம் பாய்ந்து தாய், மகள் பலி
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் குல்லா தாண்டாவை சேர்ந்தவர் பிரகலாதன். இவரது மனைவி சங்கபாய் (36 வயது). நேற்று முன்தினம் பிரகலாதன் ஐதராபாத்தில் தங்கி படிக்கும் மூத்த மகளை பார்க்க சென்றிருந்தார். இதனால் இரவில் சங்கபாய் இளைய மகள் ஸ்ரீவாணி (12 வயது) மற்றும் மகனுடன் அறையில் தூங்கி கொண்டிருந்தார். புழுக்கம் காரணமாக அறையில் ஏர் கூலர் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏர் கூலரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. தூக்கத்தில் ஸ்ரீவாணியின் கால்கள் தவறுதலாக ஏர் கூலர் மீது பட்டுள்ளது. இதில் ஏர் கூலரில் இருந்து ஸ்ரீவாணி மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் தனது தாய் மீது கை வைத்து தூங்கி கொண்டிருந்ததால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

அருகில் தூங்கி கொண்டிருந்த அவர்களது மகன் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது தாயும், சகோதரியும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்தார். அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com